முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால நாளை நீதிமன்றில் முன்னிலையாவர்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட நபராக பெயரிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, தனியார் மனுமீதான விசாரணை தொடர்பில் இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதா இல்லையா என்பது குறித்த முடிவு அக்டோபர் 14 ஆம் திகதி முற்பகல் 9.30 மணிக்கு அறிவிக்கப்படும்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் குறித்த திகதியில் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில், தம்மை பிரதிவாதியாக பெயரிட்டு, எதிர்வரும் 14ஆம் திகதியன்று முன்னிலையாகுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு நீதிப்பேராணைக் கோரி, மைத்ரிபால சிறிசேன தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த நீதியரசர்கள் சோபித ராஜகருண மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அருட் தந்தை சிறில் காமினி மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஜேசுதாசன் நடேசன் ஆகியோர், பாதுகாப்பு அமைச்சராக இருந்த போது, தகவல் கிடைத்தும் பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதன் மூலம், முன்னாள் ஜனாதிபதி குற்றம் இழைத்ததாக குற்றம் சுமத்தியே தனிப்பட்ட மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *