இங்கிலாந்தில் தலைமறைவான இலங்கையர்கள் 10 பேர்; அதிகாரிகள் வெளியிட்ட தகவல்

இலங்கை குழாத்திலிருந்து இதுவரை மொத்தமாக 10 பேர் தலைமறைவாகியுள்ளதாக இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் உள்ள இலங்கை பொதுநலவாய விளையாட்டுத்துறை குழாத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தலைமறைவானவர்கள் பிரித்தானியாவில் தொடர்ந்து தங்கியிருக்க திட்டமிட்டிருக்கலாம் என அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

ஒரு அதிகாரியும் 9 வீரர்களும் தலைமறைவாகியுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ஏஎவ்பியில் செய்தி வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக பொலிஸாரிடம் இலங்கை அதிகாரிகள் முறையிட்டுள்ளனர்.

தலைமறைவானவர்களில் மூவர் இருக்கும் இடத்தை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். எனினும், அவர்களுக்கு 6 மாத விசா இருப்பாதால் உள்ளூர் சட்டத்தை சுட்டிக்காட்டி பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

இங்கிலாந்து வருகை தந்த இலங்கை குழாத்தினரின் கடவுச் சீட்டுகளை இலங்கை குழாத்தின் அதிகாரி பொறுப்போற்றுள்ளார். அவர்கள் அனைவரும் நாடு திரும்ப வேண்டும் என்பதை உறுதிசெய்யவே கடவுச் சீட்டுக்கள் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.

எனினும் சிலர் தலைமறைவாவதை அந்த நடவடிக்கையால் தடுக்க முடியாமல் போனது. ‘விலகலுக்கு எதிராக நாங்கள் தடுத்துவைத்திருப்பதாகக் கூறி கடவுச் சீட்டுகளை பிரிட்டிஷ் பொலிஸார் திருப்பிக் கொடுக்க செய்தனர்’ என அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இது இவ்வாறிருக்க, தலைமறைவானவர்களில் ஜூடோ அணியின் முகாமையாரும் ஜூடோ சம்மேளனத் தலைவருமாக அசேல டி சில்வா, ஜூடோ வீராங்கனை சமிலா டிலானி, மல்யுத்த வீரர் ஷனித் சத்துரங்க, குத்துச்சண்டை வீரர் விற்றாலி நிக்லஸ் கடற்கரை கரப்பந்தாட்டப் போட்டியில் பங்குபற்றிய ஷஷிமல் மலின்த, அஷேன் ரஸ்மிக்க ஆகிய 6 பெயர்களை அதிகாரிகள் முன்னர் வெளியிட்டிருந்தனர். மற்றைய நால்வரின் பெயர்களை அவர்கள் வெளியிட மறுத்துவிட்டனர். எனினும் குத்துச்சண்டை மற்றும் மல்யுத்தம் ஆகிய விளையாட்டு வீரர்கள் அந்த நால்வர் என தெரியவருகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *