புஸல்லாவை, காச்சாமலை – வீடன் பகுதியில் இன்று (11.07.2022) முற்பகல் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்.
புஸ்ஸலாவ, பெரட்டாசி தோட்டத்திலிருந்து, புஸ்ஸலாவை நகரத்துக்கு பயணிகளை ஏற்றிவந்த பேருந்து ஒன்றே, வீடன் பகுதியில் வைத்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் மதிப்பையும் பயணித்த இருவரே, பஸ் மண்திட்டியில் சாய்ந்ததால், அதில் சிக்குண்டு பலியாகியுள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் பெரட்டாசி தோட்டத்தில் வசிக்கும் சுரேன்ஜித் புஷ்பகுமார் (39 வயது) மற்றும் ஹெல்போட 7ம் கட்டை தோட்டத்தில் வசிக்கும் விஜயகுமார் கவிஷ்கர் (20 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுமார் 80 பேர் வரை பேருந்தில் பயணித்துள்ளனர், அதிகளவான பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்ததாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது, பலர் மிதிபலகையிலும் தொங்கிக்கொண்டு பயணித்துள்ளனர்.
சிறு காயங்களுக்குள்ளானவர்கள் ஆரம்பக்கட்ட சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் புஸல்லாவை, வகுவப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து சம்பவத்தால் ஆத்திரமடைந்த மக்கள், பேருந்தை தீயிட்டு கொளுத்தியுள்ளனர். பெரட்டாசி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். வாகன சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
