நாடாளும‌ன்றத்தை கலைக்குமாறு சுமந்திரன் பகிரங்கமாக அறிவித்தார்

இலங்கை நாடாளுமன்றம் தனக்கான மக்கள் ஆணையை இழந்துள்ளதால், நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் வெவ்வேறு குழுக்களாக உறுப்பினர்கள் செயற்படும் நிலையில், தன்னத்தானே அவர்கள் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களாக அடையாளப்படுத்திக்கொள்வது ஒரு கலாசாரமாக மாறியுள்ளதாவும் அவர் சாடியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்திக் கட்சியிலிருந்து விலகி தான் சுயாதீனமாக செயற்படுவதாக பாட்டலி சம்பிக்க ரணவக்க இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்த நிலையில், நாடாளுமன்றில் உரையாற்றிய சுமரந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,

நாடாளுமன்றத்தில் தற்போது ஆளுந்தரப்போ அல்லது எதிர் தரப்போ இல்லை எனவும், தற்போது நாடாளுமன்றம் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளது எனவும், இது ஒரு கலாசாரமாக மாறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியலமைப்புப் படி நாடாளுமன்றம் ஆளும் மற்றும் எதிர் தரப்பைக் கொண்டிருக்க வேண்டுமே தவிர சுயாதீன உறுப்பினர்கள் கொண்டது அல்ல எனவும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்படுவதாக இருந்தால் நாடாளுமன்ற கட்டமைப்பு தோல்வியடைந்த ஒன்றாகிவிடும் எனவும் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவராக ஜனாதிபதியே காணப்படும் நிலையில், அவர் பதவி விலக வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *