பெண் ஒருவரை வாளால் வெட்டிய சம்பவத்திற்காக இரு வருடங்களின் பின்னர் சந்தேகநபர் கைது

யாழ்ப்பாணம் மிருசுவிலில் பெண் ஒருவரை வாளினால் வெட்டிக் காயப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன் 2 ஆண்டுகளின் பின் யாழ் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டிலிருந்து வழங்கப்பட்ட பணத்துக்காக பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் வாக்குமூலம் வழங்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சாவகச்சேரியைச் சேர்ந்த 26 வயதுடையவரே நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர். கடந்த 2020ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் மிருசுவில் வடக்கைச் சேர்ந்த 42 வயதுடைய பெண் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தார்.

சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் அதுதொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். அத்துடன் மேதிகமாக யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்த விசாரணையில் 2 ஆண்டுகளின் பின்னர் முதன்மை சந்தேக நபர் கைது செய்யப்பட்டுளதுடன், அவரிடமிருந்து அலைபேசி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் வெளிநாட்டிலிருந்து வழங்கப்பட்ட பணம் மற்றும் அறிவுறுத்தலில் இந்த தாக்குதலை மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஒட்டுசுட்டான் மற்றும் பாலாவி பகுதிகளில் 3 மாதங்களுக்கு முன் இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறைச் சம்பவங்களுடனும் சந்தேக நபருக்கு தொடர்புள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *