பா.இரஞ்சித் இயக்கத்தில் கடைசியாக வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியான நிலையில், தற்போது அவர் தயாரித்துள்ள படமும் அவ்வாறே வெளியாக உள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் பா.இரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனம் மூலமாக திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார். அந்த வகையில் இவர் தயாரிப்பில் வெளியான பரியேறும் பெருமாள், குண்டு, ரைட்டர், குதிரைவால், சார்பட்டா பரம்பரை போன்ற படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தன.
இந்நிலையில் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய வறுகறி என்கிற சிறுகதை “சேத்துமான்” எனும் பெயரில் திரைப்படமாக தயாராகி உள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குனர் தமிழ் என்பவர் இயக்கியிருக்கிறார். பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு எழுத்தாளர் பெருமாள் முருகன் வசனம் எழுதியுள்ளார்.
இப்படத்தில் பிந்து மாலினி இசையமைப்பாளராகவும், சி.எஸ்.பிரேம் குமார் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். புனே சர்வதேச திரைப்பட விழா மற்றும் கேரளா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இப்படம் மிகுந்த பாராட்டுதல்களைப் பெற்றது. சென்னை திரைப்பட விழாவில் “சேத்துமான்” படத்துக்கு சிறந்த திரைப்படத்திற்கான விருது கிடைத்ததது. தாத்தாவிற்கும் பேரனுக்கும் இடையிலான மாசற்ற அன்பைப் பற்றி பேசும் படமாக தயாராகி உள்ள இதில் தாத்தாவாக மாணிக்கமும், பேரனாக அஷ்வினும் நடித்துள்ளனர். பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளை வென்ற சேத்துமான் திரைப்படம் வருகிற மே 27-ந் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.