அடுத்த சில மாதங்களுக்கு கடினமான நெருக்கடிகளை நாடு எதிர்கொள்ளும் நிலை ஏற்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டு மக்களுக்கு நேற்றிரவு உரையாற்றிய போதே இவ்வாறு கூறினார்.
“இந்தச் சந்தர்ப்பத்தில் இலங்கையின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளது.
2022 ஆரம்பத்தில் கடந்த அரசாங்கத்தின் வரவுசெலவு திட்டத்தில் 2.3 ட்ரில்லியன் ரூபா வருமானமாக கிடைக்கும், என காட்டப்பட்டாலும், இந்த வருடத்திற்கான உண்மையான வருமான எதிர்வு கூறல் 1.6 ட்ரில்லியன் ரூபா மட்டுமேயாகும்.
2022 ஆம் ஆண்டிற்கான அரசின் செலவு 3.3 ட்ரில்லியன் ரூபா எனக் கணிக்கப்பட்டிருந்த போதும், கடந்த அரசில் வட்டி வீதம் அதிகரித்தமை மற்றும் மேலதிக செலவுகள் காரணமாக 2022 ஆம் ஆண்டிற்கான அரசின் மொத்த செலவு 4 ட்ரில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.
வருடத்திற்கான வரவுசெலவு பற்றாக்குறை 2.4 ட்ரில்லியன் ரூபாவாக உள்ளது. இது சராசரி தேசிய உற்பத்தியில் 13 சதவீதமாகும்.
அங்கீகரிக்கப்பட்ட கடன் எல்லை 3200 பில்லியன் ரூபாயாகும்.
மே மாதம் இரண்டாம் வாரத்திலேயே, 1950 மில்லியன் ரூபாவை செலவு செய்திருந்தோம். அதன்படி அண்ணளவான 1250 மில்லியன் ரூபாவே எஞ்சியுள்ளது.
திறைசேரி முறிகளை வழங்கும் அனுமதிக்கப்பட்ட எல்லையை 3000 பில்லியனில் இருந்து 4000 பில்லியன் வரை அதிகரிக்கும் யோசனை ஒன்றை நாடாளுமன்றத்தில் முன்வைக்க அமைச்சரவையில் தீர்மானத்துள்ளோம்.
2019 நவம்பர் மாதத்தில் எமது அந்நியச் செலாவணி கையிருப்பு 7.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இருந்தன.
இன்று திறைசேரியால் ஒரு மில்லியன் டொலர்களைக்கூட தேடிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எரிவாயுவை கப்பலில் ஏற்றும் பொருட்டு செலுத்தத் தேவையான 5 மில்லியன் அமெரிக்க டொலர்களைக்கூட இந்த நேரத்தில் நிதியமைச்சினால் தேடிக்கொடுக்க முடியாதுள்ளது.
இவ்வனைத்து நெருக்கடிகளுக்கு மத்தியில் நாம் முகம் கொடுக்கும் மிகமோசமான சில சிக்கல்கள் உள்ளன.
எதிர்வரும் சிலநாட்களில் வரிசைகளை கட்டுப்படுத்தும் பொருட்டு மிகவிரைவில் சுமார் 75 மில்லியன் அமெரிக்க டொலர்களை தேடவேண்டிய உள்ளது.
இப்போது எமது கையிருப்பில் ஒரு நாளைக்குத் தேவையான பெற்றோல் மட்டுமே உள்ளது.
இன்றில் இருந்து டீசல் பிரச்சினைக்கு ஓரளவு தீர்வு கிடைக்கும். இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் மே 19 மற்றும் ஜூன் 01 ஆகிய திகதிகளில் மேலும் இரண்டு டீசல் கப்பல்களும் மே 18 மற்றும் மே 29 இல் இரண்டு பெற்றோல் கப்பல்கள் வரவுள்ளன.
இன்றுவரை 40 நாட்களுக்கு மேலாக இலங்கையின் கடற்பரப்பில் பெற்றோல், மசகெண்ணெய் , எண்ணெய் ஏற்றிவந்த கப்பல்கள் 3 நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அவற்றுக்கு செலுத்தும் பொருட்டு திறந்த சந்தையில் டொலர்களை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
மின்சாரத் தேவையில் நான்கில் ஒன்றை உற்பத்தி செய்ய எரிபொருளே பயன்படுத்தப்படுகிறது. இதனால் நாளாந்த மின்வெட்டு இன்னும் சில நாட்களில் 15 மணித்தியாலங்களாக மாறவும் இடமுண்டு.
ஆனால் நாம் இதற்கு தேவையான நிதியை தேடிக்கொண்டுள்ளோம்.
அதேபோன்று முடிந்தளவு நுகர்வோருக்கு எரிவாயுவை பெற்றுக் கொடுக்கும் பொருட்டு 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை கூடிய விரைவில் தேடவேண்டும்.
மண்ணெண்ணெய் மற்றும் சம்பந்தமான நிலைமை இதனை விடப் பயங்கரமானது.
இந்த நேரம் வரை இலங்கை மத்திய வங்கி, அரச வங்கிகள், தனியார் வங்கிகள் , இலங்கையில் உள்ள வெளிநாட்டு வங்கிகள் அனைத்தும் டொலர் இல்லாத சிக்கலுக்கு முகம் கொடுத்துள்ளன.
எம்மிடம் கையிருப்பில் உள்ள டொலர்களின் அளவு மிகவும் சிறியது.
எரிவாயு கப்பலுக்கான கட்டணத்தை செவ்வாய்க்கிழமைக்கு முன்னர் செலுத்த நாம் நடவடிக்கை எடுப்போம். அதன் மூலம் உங்களின் எரிவாயு பிரச்சினைகளுக்கு ஏதோவொரு தீர்வு கிடைக்கும்.
இருதய நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகள், சத்திர சிகிச்சைக்குத் தேவையான சிகிச்சை உபகரணங்கள் உட்பட பல மருத்துவ மருந்து வகைகளுக்கான தட்டுப்பாடு நிலவுகிறது.
மருத்துவ மருந்துகள், சத்திர சிகிச்சை உபகரணங்கள் மற்றும் தேவையான உணவுகளை வழங்கும் வழங்குநர்களுக்கு 04 மாதங்களாக கட்டணம் செலுத்தப்படவில்லை. அவர்களுக்கு வழங்கவேண்டிய நிலுவை தொகை 34 பில்லியன் ரூபாவாகும்.
அதே போன்று அரச ஔடதக் கூட்டுத்தாபனம் இறக்குமதி செய்த மருத்துவ மருந்துகளுக்கு 04 மாதங்களாக கட்டணம் செலுத்தப்படவில்லை.
அதனால் அவர்களை கருப்புப் பட்டியலில் சேர்க்க வெளிநாட்டு மருத்துவ நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
14 அத்தியாவசிய மருத்துவ மருந்துகள் தட்டுப்பாடாக உள்ளமையும், அதில் இரண்டையாவது வழங்க இந்த நேரத்தில் எமது மருத்துவ வழங்கள் பிரிவிற்கு இயலாது உள்ளமை மிகவும் வருந்தத்தக்க விடயமாக உள்ளது.
இருதய நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து, மற்றும் விசர் நாய்க்கடி எதிர்ப்பு மருந்து ஆகியவையே அந்த இரண்டு மருந்துகளாகும். விசர் நாய்க்கடி எதிர்ப்பு மருந்துக்கு மாற்று மருந்து எதுவும் இல்லை.
இதற்கிடையில் 2022 ஆண்டிற்காக முன்வைக்கப்பட்ட அபிவிருத்தி வரவுசெலவு திட்டத்திற்கு பதிலாக புதிய வரவுசெலவு திட்டமொன்றை முன்வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதனை சலுகை வரவுசெலவு திட்டமாக முன்வைக்கவே நான் திட்டமிடுகிறேன்.
அதேபோல், இதுவரை நட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் ஸ்ரீலங்கன் விமான சேவையை தனியார் மயப்படுத்துமாறு நான் முன்மொழிகின்றேன்.
2020 – 2021 ல் மட்டும் ஸ்ரீலங்கன் விமான சேவை 45 பில்லியன் ரூபா நட்டமடைந்துள்ளது. 2021 மார்ச் 31 ஆகும் போது இதன் மொத்த நட்டம் 372 பில்லியன்களாக இருந்தது.
நாம் இதனை தனியார் மயப்படுத்தினாலும் இந்த நட்டத்தை நாமே ஏற்க நேரிடும்.
இந்த நட்டத்தை வாழ்க்கையில் ஒருமுறையாவது விமானத்தில் பயணிக்காத இந்த நாட்டின் ஏழை எளிய மக்களும் அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
குறுகிய காலத்திற்கு நாம் இதனை விட மோசமான காலத்திற்கு முகம் கொடுக்கப் போகின்றோம். பணவீக்கம் மேலும் அதிகரிக்க இடமுள்ளது.
அரசாங்கத்துக்கு, தற்போது ஒக்ரேன் 92 ரக பெற்றோல் மூலம், லீற்றருக்கு 84.38 ரூபாவும், 95 ரக பெற்றோல் மூலம், லீற்றருக்கு 71.19ரூபாவும், டீசல் மூலம் லீற்றருக்கு 131.55 ரூபாவும், சூப்பர் டீசல் மூலம் லீற்றருக்கு136.31 ரூபாவும் , மண்ணெண்ணெய் மூலம், லீற்றருக்கு 294.50 ரூபாவும் நட்டம் ஏற்படுகிறது.
பெற்றோலிய கூட்டுத்தாபனத்தால் இனியும் இந்த நஷ்டத்தை தாங்க முடியாது
அதேபோல இலங்கை மின்சாரசபை மின் அலகு ஒன்றிற்காக உங்களிடம் 17 ரூபாவை அறவிட்டாலும் அதற்காக 48 ரூபா வரை செலவு செய்கிறது. அதன்படி ஒரு அலகிற்கு 30 ரூபா நட்டம் ஏற்படுகிறது.
நான் இந்த நேரத்தில் விருப்பப்படா விட்டாலும் பணத்தை அச்சடிப்பதற்கு அனுமதி வழங்க நேரிடும். அரச ஊழியர்களின் இந்த மாத சம்பளத்தை வழங்கவும் , உங்களுக்கு தேவையான பொருட்கள் சேவைகளின் பொருட்டே அதனை செய்யவுள்ளது.
எவ்வாறாயினும் பணத்தை அச்சடிப்பதால் ரூபாவின் பெறுமதி குறையும் என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும்.
எதிர்வரும் சில மாதங்களுக்கு நீங்களும் நானும் வாழ்க்கையில் மோசமான காலக்கட்டத்தை கடக்க நேரிடும். அதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் முகம் கொடுக்க வேண்டும்.
நான் மக்களுக்கு விடயங்களை மறைத்து பொய் சொல்வதற்கு எந்தவகையிலும் விரும்பவில்லை.
பயங்கரமாக இருந்தாலும் அசிங்கமாக இருந்தாலும் இதுதான் உண்மையான நிலைமை.
குறுகிய காலத்திற்கு நாம் கடந்த காலத்தைவிட மிகவும் கஸ்டமான காலத்திற்கு முகம் கொடுக்க போகின்றோம். ஆனால் இது குறுகிய காலத்திற்கு மட்டுமே.
எதிர்வரும் சில மாதங்களில் எமது நட்பு நாடுகளின் உதவிகள் மற்றும் ஒத்துழைப்பு எமக்கு கிடைக்கும்.
அவர்கள் எமக்கு உதவி செய்வதாக உறுதியளித்துள்ளனர். அதன் பொருட்டு எதிர்வரும் சில மாதங்கள் நாம் பொறுமையுடன் இருக்க வேண்டும்.
ஆனால் இதில் இருந்து நாம் மீள முடியும். அதன்பொருட்டு நாம் புதிய வழிக்கு செல்ல நேரிடும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.